ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்பதாக கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து அவசரகால விதிமுறைகளின் கீழ், அங்கு கைப்பற்றியவற்றை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்ட ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

இதேவேளை அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த போதிலும், சந்தையில் அரிசியின் விலை குறையவில்லை என்று இதன்போது பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியிரந்தனர்..

அதன்படி, நுகர்வோர் விவகார ஆணையம், அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உடனடித் திட்டத்தை உருவாக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதேவேளை அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பையும் அரசாங்கம் அண்மையில் வெளியிட்டது, ஆனால் சீனி விலை ஓரளவு குறைந்த போதிலும் அரிசியின் சந்தை விலை குறையவில்லை என நுகர்வோர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அரிசி சந்தையை கட்டுப்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் அரிசியை கொள்முதல் செய்து சந்தைக்கு வெளியிடுமாறும் வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய இன்றுமுதல் பொலநறுவை மற்றும் முக்கிய பல இடங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: