ஜனாதிபதியின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றுவதே நோக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Thursday, April 29th, 2021

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சௌபாக்கிய தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கை தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல அவற்றை நிறைவேற்றுவதை பொறுப்பாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற பேண்தகு அபிவிருத்தி தொடர்பான ஊடக கலந்துரையாடலில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பசுமைச் சமூக பொருளாதார இலக்குகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் தற்போது எதிர்கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இத்திட்டம் அமையவுள்ளது. குறித்த யோசனைக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருக்கிறது.

பல நாடுகள் சூழல்நேயமிக்க பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பத்தில், இலங்கையும் அந்த நோக்கில் இணைய வேண்டும்மென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யோசனையை முன்வைத்த போது சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி அமைச்சரவையில் முன்வைத்த யோசனையில் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இரசாயன உரம், கிருமிநாசினி பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடையை விதித்தல், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை விரைவுபடுத்தல், வன மேம்பாட்டு  வேலைத்திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சூழல் பாதுகாப்பு என்பது உலகில் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதற்கமைவாக சூழல் தொடர்பாக உலக நாடுகள் பலவும் கூடுதலான கவனத்தை செலுத்தியுள்ளதுடன் மாத்திரமின்றி கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுவருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிருமிநாசினி பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடையை விதித்தல் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை விரைவுபடுத்தல் வன மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: