ஜனாதிபதியின் தீர்மானத்தை ஏற்க முடியாது -நவின் டி சொய்சா !

Friday, April 21st, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஜனாதிபதியின் தீர்வுத் திட்டம் குறித்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான 100 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.இதன் போது ஜனாதிபதியின் தீர்வுத் திட்டத்தினை எதிர்ப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு பிரிதொரு நிர்வாக சபை நிறுவப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு ஊடாக தற்போதைய நிர்வாக சபை பிழையானது என்பது வெளிச்சமாகியுள்ளது.தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு போதியளவு பயிற்சி இல்லை என ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி சில காரணிகளை ஒப்புக்கொண்டுள்ளார்.எனினும் சுகாதார அமைச்சரும் உயர்கல்வி அமைச்சரும் ஜனாதிபதியை பிழையாக வழிநடத்துகின்றனர்.

ஜனாதிபதியின் தீர்வுத் திட்டங்கள் மூலம் இது தெளிவாகின்றது.சைட்டத்திற்கு பிரிதொரு நிர்வாக சபையை உருவாக்காது அதனை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பெற்றுக் கொள்ளத் தவறினால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து போராட்டத்தை தொடர நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: