செயன்முறைப் பரிட்சை இன்றி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆலோசனை!

Monday, August 30th, 2021

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த கலந்துரையாடலில் – க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 6 இலட்சத்து 22ஆயிரம் மாணவர்களில், ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் சற்றுக் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவது, எதிர்வரும் பரீட்சைகளை நடத்துகின்றமை மற்றும் பெறுபேறுகளை வெளியிடுகின்றமை ஆகிய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் மாணவர்களின் செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் அத்தியாவசியம் என்றால், அந்த மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் செயன்முறைப் பரீட்சையின் ஊடாக பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறாததால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: