சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள பாதாள உலகக் குழு இல்லாதொழிக்கப்படும் – பசில் ராஜபக்ச உறுதி!

Tuesday, July 28th, 2020

நாட்டிலிருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதோடு சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் தமது அரசில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களே பெரும் பலமானவர். அவர்களது பொருளாதார பலம் உயர்வடையும் போது குடும்பத்தின் பொருளாதார நிலைமை பலமடைவதோடு மாத்திரமின்றி அவை முழு நாட்டினதும் பொருளாதாரத்திற்கு பலமாக அமையும்.

குடும்பப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான பிரதான பொறுப்பு பெண்களையே சாருகின்றது. அதனைத் தெரிந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச அரசு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ‘திவிநெகும’ உள்ளிட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்தி முழு இலங்கையின் பெண்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதோடு, சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் எமது அரசில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருந்தாலும் அவற்றை நாட்டுக்குப் பொருத்தமான வேலைத்திட்டமாகவே முன்னெடுப்பதற்கு அரசு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதோடு விவசாயத்துக்கும் முன்னுரிமையளிக்கப்படும்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரான சிறுவர்களுக்கு எவ்வித தடையும் இன்றி சுதந்திரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவதோடு வெவ்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள மாணவர்களுக்கு பாதுகாப்புடனான சூழலில் கல்வியைப் பெற்றுக் கொடுக்க எமது அரசில் நடவடிக்கை எடுக்கப்படும்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: