சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

Wednesday, September 7th, 2022

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று(07) அனுஸ்டிக்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7 ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர். இதன்போது மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அன்றையதினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: