சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 4th, 2020

அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11 ஆம்  திகதிமுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பல குறைபாடுகள் காணப்படுவதை அடுத்து இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் நவீன் சொய்சா போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதனிடையே தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்காக ஒரு மாத காலத்திற்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குமாறு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில். தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரியது நியாயமானது, ஆனால் அரசாங்கத்தினால் தற்போதைய சூழ்நிலையில் மேலும் நிவாரணம் வழங்குவது சிரமமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் இன்றுமுதல் ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த சேவைகள் வழங்கப்படுவது அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முன்வைக்கபபட்ட பட்டியலுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

இதற்கான அனுமதியை வாரந்தோறும் பெற வேண்டும். இதற்கான கோரிக்கை ஒவ்வொரு வியாழக்கிழமைக்கு முன்னதாக ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.

ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதுதொடர்பாக குறுற்தகவல் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும். அதனை ரயிலில் பயணிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் பிரிவினரிடம் காட்ட வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ரயில் நிலைய மேடைகளிலும் தலா இரண்டு ராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இதேவேளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டவுடன் புதிய திட்டங்களின் கீழ் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக பஸ்களை வழங்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பஸ்களை பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே பல நிறுவனங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: