சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் இடிந்துள்ளதுடன் 82 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (06) மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: