சீனி வரி மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனி வரி மோசடி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தயாரிக்கப்படும் அறிக்கை அடுத்த வாரமளவில் தமக்கு கிடைக்கப் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு சீனிக்கான விசேட வர்த்தக வரி 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைக்கப்பட்டது. எனினும் அரசாங்கம் எதிர்பார்த்த வகையில் விலை குறைப்பு மக்களை சென்றடையவில்லை.

இந்த விடயம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது.

குறித்த அறிக்கைக்கு அமைய, ஆயிரத்து 670 கோடி ரூபா அரசுக்கு இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குறித்த ஆயிரத்து 670 கோடி ரூபா, சீனி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களினால் பகிரப்பட்டமை குறித்த தகவல்களும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கணக்காய்வாளர் நாயகத்தினால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த தொகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தொகையை மீள அறவிடுவது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாகவே கவனம் செலுத்த முடியும்.

எனவே, குறித்த தொகை எவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000.

Related posts: