சிறைக்குள் தாக்கினர் என்று பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு: மது நிலைய சிசிரிவி பதிவின்படி கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு

Friday, May 11th, 2018

யாழ்ப்பாண சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்தி சேதமேற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் மீது சிறைச்சாலைக்குள் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அது தொடர்பில் நேற்றுமுன்தினம் மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பொது மகனைத் தாக்கிய ஆதாரம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியது. அதனை யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது என அச்சுறுத்தி சந்தேகநபர் மீது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் சந்தேகநபரின் கண்புருவம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவச் சான்றிதழை முன்வைத்து சந்தேகநபரின் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலுள்ள மதுபான விடுதியொன்றினுள் கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்;பெற்றது. வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறைச்சாலை ஜெயிலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமைக்குத் திகதியிடப்பட்டது. சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானார்.

சந்தேகநபரை சிறை அலுவலர்கள் தாக்கியமைக்கான ஆதாரம் மதுபானச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. அதனைப் பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாமும் கைகலப்பில் ஈடுபட்டமைக்கான ஆதாரம் அதில் உள்ளதை அறிந்து சந்தேகநபரை சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கியுள்ளனர். இந்த விடயத்தை எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறை அலுவலர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் சந்தேகநபரைக் கொண்டுசெல்ல முன்னர் அவரை பரிசோதித்து வழங்கிய மருத்துவச் சான்றிதழில் அவரது உடலில் காயங்கள் உள்ளமை தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

சிறைச்சாலைக்குள் இருந்தபோது பரிசோதிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவச்சான்றிதழில் சந்தேகநபரின் கண் புருவம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிசிரிவி கமரா பதிவைப் பெற்று இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் மதுபானசாலையின் சிசிரிவி பதிவு மன்றில் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்தப் பதிவில் உள்ளவாறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்பட வேண்டும் என்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் பொலிஸில் முறைப்பாட்டை வழங்கவேண்டும். அது தொடர்பில் சந்தேகநபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற வேண்டும் என்றும் நீதிவான் கட்டளையிட்டார். வழக்கு விசாரணை ஜீன் 18 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts: