அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதிக்கு 33 கோடி ஒதுக்கீடு!

Sunday, May 7th, 2017

ஆறு அமைச்சர்கள், ஆளுநர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய 33 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை ஒன்று ஆளும் கட்சியின் கொறடா கயந்த கருணாதிலக்கவினால் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரி ஒருவரின் வெளிநாட்டு பயணத்திற்காக 4 கோடி ரூபாவும் அமைச்சர் ஒருவரின் வீட்டை புதுப்பிக்க ஒரு கோடி ரூபாவும் இந்த குறை நிரப்பு பிரேரணை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு 43 மில்லியன் ரூபா, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு 42 மில்லியன் ரூபா, அமைச்சர் மனோ கணேசனுக்கு 43 மில்லியன் ரூபாவும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேவுக்கு 43.7 மில்லியன் ரூபா, ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கு 43 மில்லியன் ரூபா, ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவுக்கு 29 மில்லியன் ரூபா,மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு 43 மில்லியன் ரூபா, பிரதமரின் நாடாளுமன்ற விவகார செயலாளருக்கு 43 மில்லியன் ரூபாவும் வாகனங்களை கொள்வனவு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts: