சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட சபை – யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023

வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு என ஒரு சபை அமைக்கப்பட்டு அது  அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (29) யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த மூன்று மாதங்களாக இந்த சுற்றாடலிலே பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான ஒரு சந்தை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது,

இன்றைக்கு அது பிரபலமாகி இந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை போனால் இந்த பொருளை வாங்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது, இந்த நிலைமை இன்னும் சிறப்பாக அபிவிருத்தி அடைந்து வாடிக்கையாளர்கள் யாழ்ப்பாண நகரத்திலே உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்ற ஒரு இடமாக இந்த இடத்தை தேர்வு செய்கின்ற அளவுக்கு காட்சி படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்கின்ற எங்களுடைய எதிர்பார்த்து ஓரளவுக்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற முயற்சியாளர்கள் ஒன்றிணைந்து முயற்சியாளர்களுக்கிடையிலான ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள், அது ஒரு ஆரம்ப கட்டத்திலே இருக்கிறது எதிர்காலத்திலே அது பல்வேறு முன்னேற்றங்களை கண்டு முயற்சியாளர்கள் தங்களுக்கு இடையே சிறந்த ஆரோக்கியமான கட்டமைப்பை ஏற்படுத்தி தொழில் முயற்சியினை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று இவ்விடத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் எங்களுடைய உள்ளூர் உற்பத்திகள் சுகாதார ரீதியான தரம் கூடிய சிறந்த உற்பத்திகளாக இருக்கின்றன, இருந்தாலும் நாங்கள் தேசிய ரீதியாக சர்வதேச ரீதியாக இன்றைக்கு இருக்கிற எங்களுடைய போட்டி சந்தைக்கு ஏற்ப இன்னும் பல முன்னேற்றங்களை காண வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அந்த திணைக்களத்தில் இருக்கக்கூடிய ஆய்வு பிரிவுகள் அவற்றோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற பொருளியல் துறை பிரிவு உயிரியல் துறை பிரிவு மற்றும் விவசாயப் பிரிவு போன்ற பிரிவுகள் இவ்வாறான உற்பத்தியாளர்களுடைய நிலையங்களை தங்களுடைய வெளிக்கல பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கான வியூகங்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும் இவர்களோடு இணைத்து எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுகின்ற மாணவர்களும் இவ்வாறான துறைகளில் முன்னோறுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் எங்களுடைய தொழிலை மேற்கொள்ளுகின்ற போது அந்த தொழிலுக்கான அங்கீகாரம் இருக்க வேண்டும் சந்தையிலே அவர்களுக்கான தனித்துவம் காணப்பட வேண்டும், ஆனபடியினால் உற்பத்தி முயற்சியாளர்கள் அதில் ஈடுபடுகின்றவர்கள் அந்த துறை சார்ந்த அனுபவம் அறிவு ஆற்றல் என்பவை சான்றுப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மாகாண ரீதியாக பார்க்கின்ற போது வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு என ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். இன்றைக்கு இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான தொடர்பு வாராந்தம் வருகின்ற கப்பல் சேவை, விமான சேவை இருக்கிறது, அங்கே இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எங்களுடைய உற்பத்திகளை விரும்புகின்ற அளவுக்கு தரம் குறையாமல் இருக்க வேண்டும்,என்று கூறிக்கொண்டு நல்லூர் கந்தனுடைய திருவிழா காலத்தில் இந்த விற்பனை கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக உங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: