சித்தன்கேணியில் கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மரணம்!

Saturday, May 6th, 2017

யாழ். சித்தன்கேணியில் நேற்று (05) இரு மோட்டார்ச் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று நேருக்கு நேர் மோதியதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு பொலிஸார் உட்பட மூவர் படுகாயமுற்ற நிலையில் யாழ். சங்கானைப் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சித்தங்கேணி வலியடைப்பு மதவடிப் பகுதியில் சிவிலுடையில் மோட்டார்ச் சைக்கிளில்  பயணித்த பொலிஸாரின் மோட்டார்ச் சைக்கிளுடன், சுழிபுரம் பகுதிக்குப் பிறந்தநாள் கொண்டாட்டமொன்றுக்குச் சென்றுவிட்டு மதுபோதையில் பயணித்த இளைஞர்களின் மோட்டார்ச் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குக் காரணமான மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த 17 வயதான இரு இளைஞர்களும்  போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக மோட்டார்ச்  சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் இளவாலைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 33 வயதான துரைசிங்கம் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்குக்  கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: