சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி – சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி பொலிசாரால் கைது!

Friday, March 1st, 2024

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் இன்று அதிகாலை (01.03.2024) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017.03.10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஸஹ்ரான் பிரிவினைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்றுகூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: