சரியானதைச் செய்வது சவாலாகும் – ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம் – கமநல சேவை உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021

சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

கமநலச் சேவைகள் உத்தியோகத்தர்களுடன் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரிங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஒரு போகம், இரு போகத்துக்கு மாத்திரமன்றி, பல சந்ததியினர் பயன்பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அப்போது அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் “தவறான விடயம் ஒன்றை செய்யுமாறு தான் எவரிடமும் எப்போதும் கூறமாட்டேன்” என்றும், உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் பசுமை விவசாயத்தில் ஈடுபடுவதால், பயிரிடப்படும் நில அளவிவைக் குறைக்க இடமளிக்க முடியாது. சேதனப் பசளையைப் பயன்பாட்டுடன் முன்னோக்கிப் பயணிப்பதற்கான விவசாயிகளை ஊக்கப்படுத்துவது, நாட்டுக்கான அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

இதேநேரம் உலகம் ஏற்றுக்கொண்டுள்ள உயர் சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நைட்ரஜன் உரத்துடன் திரவ நைட்ரஜனைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் திரவ உரத்தில் உள்ள நைட்ரஜன் கூறு, இலைகளின் மூலம் நேரடியாக உள்ளீர்க்கப்படும். அந்தத் திரவ நைட்ரஜனை எதிர்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விளைச்சல் குறைவடைதல் தொடர்பாக விவசாயிகளுக்குத் தேவையற்ற அச்ச நிலை ஏற்பட்டிருப்பதோடு, உரிய நேரத்துக்கு உரத்தை விவசாயிகளின் கைகளுக்கு வழங்குவதன் மூலமும் சரியான தெளிவூட்டல்களை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலமும், விவசாயிகளுக்குள் இருக்கும் பயம் மற்றும் பின்வாங்கும் தன்மையை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்ட கமநலச் சேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற சேதனப் பசளையின் தரம் மற்றும் சிறப்பு தன்மையை பரீட்சிக்கும் வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பதால், அவ்வசதிகளை விரிவுபடுத்தித் தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஊக்கக் கொடுப்பனவுகள், அடிப்படைக் கொடுப்பனவுகள் என்பன தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்கால போகங்களின் போது, சேதனப் பசளை உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களைப் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: