துண்டாடப்பட்ட கரத்தை இணைத்த வைத்தியர்கள்!

Friday, June 24th, 2016

யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, வலது கையின்மீது வீட்டு கூரைக்கு போடப்பட்டிருந்த தகரம் விழுந்துள்ளது.இதனால் குழந்தையின் வலது கரம் முழங்கையின் கீழ் முற்றாக துண்டாடப்பட்டுள்ளது. பதறிப்போன பெற்றோர் துண்டாடப்பட்ட கையுடன் சிறுவனை மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். உடனடியாக துண்டாடப்பட்ட கையினை ஐஸ் கட்டியில் வைத்து மன்னார் வைத்தியசாலையிலிருந்து சிறுவன் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.

நள்ளிரவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

12மணித்தியாலங்கள் தொடர்ந்து செய்யப்பட்ட மிகவும் நுட்பங்கள் நிறைந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார் சத்திரசிகிச்சை நிபுணர் விபுல பெரேரா.வெற்றிகரமாக முறிந்த எலும்புகளை எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் சிறிகிறிஸ்ணா பொருத்திக்கொடுக்க தனது நிபுணத்துவ சிகிச்சையை தொடர்ந்துள்ளார் வைத்தியர் விபுல.

நரம்புகள், நாளங்கள், தசைகள் என்பவற்றை மிகவும் சிறப்பாக பொருத்துவதில் சிறப்பு தேர்ச்சிபெற்றவர் வைத்தியர் விபுல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட கைகளுடன் குறித்த சிறுவன் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துண்டாடப்பட்ட கைகள் இணைக்கப்படும் சிகிச்சைகள் இலங்கையில் வேறுசில வைத்தியசாலைகளில் நடைபெற்றபோதிலும் கையின் பூரண செயற்பாடுகள் திரும்பபெறப்பட்ட சம்பவங்கள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: