சந்தைகளால் மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கிறார் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்!

Friday, December 18th, 2020

மருதனார்மடத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளிற்கும் தற்போது பரவியுள்ளது. இது மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடாக அனைத்து சந்தைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் மருதனார்மட சந்தையுடன் தொடர்புடைய 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று யாழ் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 588 பிசிஆர் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. யாழ் மாவட்டத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் இரண்டு பேர் சுன்னாகம் சந்தையில் வர்த்தகர்களாக உள்ளனர். ஏனைய 3 பேரும், கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதனிடையே பண்டாரநாயக்க விமான நிலைய ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்ட 325 மாதிரிகளின் முடிவுகள் இன்றுகாலை கிடைத்தன. இதில் திருநெல்வேலி சந்தை வியாபாரியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்.

முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட 204 மாதிரிகளின் முடிவுகளும் கிடைத்துள்ளன. அதில் எவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை வடமாகாணத்தில் 90 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 78 பேர், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 1பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரை தவிர ஏனைய 74 பேரும், மருதனார்மட சந்தை பரமபலுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்’தக்கது.

Related posts: