கொரோனா வைரஸ் : இலங்கையை தாக்கினால் பாரிய ஆபத்து – சுகாதார சேவை இயக்குனர் நாயகம்!

Thursday, March 5th, 2020

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவினால் தேசிய அனர்த்த நிலைமை அறிவிக்க நேரிடும் என சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு கொரோனா தாக்கினால் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

புதிய எச்சரிக்கை கணிப்பிற்கமைய தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளினால் இலங்கைக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனினும் தென்கொரியா, இத்தாலி, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் எங்களுக்கு பெரிய ஆபத்து உள்ளது. தென்கொரியாவில் தற்போது வரையில்ல 5000க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளன.

இத்தாலியில் 2000 நோயாளிகளை நெருங்குவதுடன், ஈரானில் 1000க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர். இத்தாலி மற்றும் தென்கொரியா நாடுகளில் சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பு உள்ள போதிலும் ஈரானில் சுகாதார கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பெப்ரவரி 25 முதல் 29 ஆம் திகதி வரையிலான 5 நாட்களுக்குள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வந்த பயணிகளின் எண்ணிக்கை 1145 என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: