கொரோனாவின் அபாய கட்டத்தை கடந்தது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அபாய காலத்தை இலங்கை கடந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தப்படுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவே குறித்த அபாய நிலைமை தவிர்க்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்னமும் சமூக பரவலுக்கான நிலையை அந்த தொற்று அடையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்..

அத்துடன் கொரோனா அபாயத்தால் முடக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது யோசனை முன்வைக்கப்பட்டது.

முதலில் மாகாண ரீதியில் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கட்டம் கட்டமாக சமூகத்தை விடுவிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார் என்று குறிப்பிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், மீண்டும் விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்திலும் தொடர்ந்தும் மக்கள் சமூக இடைவெளியைப் பேண வேண்டிய நிலை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தொடர்பில் மீள தேடி பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதை கருத்தற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 30,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: