கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம் மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, May 7th, 2020

கொரோனா தொற்றினால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் விரைவில் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் – நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை வழங்கும் ஆடைத்தொழில்துறை மற்றும் சுற்றுலா தொழிற்துறை ஆகியன புதிய உத்வேகத்துடன் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்திய நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட விடயங்கள் ஏனைய நாடுகளை ஈர்க்கக்கூடியதாகவும் சர்வதேச மற்றும் மேற்கத்தைய மருத்துவத்துறையின் அவதானத்தை ஈர்ப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச சுகாதார சான்றிதழுடன் கூடிய விசாவை விநியோகித்து அதிகளவில் செலவு செய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் தங்கக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: