கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளம்!

Wednesday, September 13th, 2023

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழாம் நாள் அகழ்வுபணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா,

நேற்றயதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின்போது சேரிக்கப்படும் உடற்பாகங்கள் மற்றும் சான்று பொருட்கள் என்பன நீதிமன்ற பதிவேட்டின் பதிவு மற்றும் பொலிஸ் பதிவு,மருத்துவமனை பதிவுக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அகழ்வு பணிகள் நிறைவில் உடற்பாகங்கள் மற்றும் சான்று பொருட்கள் மேலதிக பகுப்பாய்வு நடடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அமரர் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி!
அஞ்சல் அலுவலகத்தில் 5 இலட்சம் பதிவுத்தபால்கள் தேங்கியுள்ளன - கிடப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரி...
அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்ம...