கூலிக்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது – யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
” தெல்லிப்பளையில் இடம்பெற்ற சம்பவம் போல யாழ். மாவட்டத்தில் அவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை 48 மணி நேரத்திற்குள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளார்கள். அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் பொலிஸாரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
சில குழுவினரிடையே இருந்து வரும் பகைமையின் காரணமாகவே தற்போதைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தெல்லிப்பளை சம்பவம் கூட ஏற்கனவே இரு குழுக்களுக்கிடேயே உள்ள முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் முகமாகவே இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஏதாவது குற்ற செயல்கள் இடம்பெற்றால் அவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில், யாழ் . மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம்.
அவ்வாறு யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நாம் முன்னெடுத்துள்ளோம்.
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.
பொதுமக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு யாழில் பொலிஸார் தொடர்ச்சியாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|