குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு : முதலாவதாக தரையிறங்கியது நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினருடன் சென்ற இலங்கை விமானம்!

Wednesday, October 20th, 2021

சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற விசேட விமானம், குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கியது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1147 என்ற இந்த விசேட விமானத்தில், 95 தேரர்கள் உள்ளடங்கலாக 111 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், குஷிநகர் விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இலங்கையிலிருந்து சென்ற குறித்த விமானம், முதலாவதாக அங்கு தரையிறங்கியது.

புத்த பெருமான் பரிநிர்வாணமான பிறவா நிலை அடைந்ததாக கருதப்படும் புனித பூமியான குஷிநகரில் சுமார் 260 கோடி ரூபா இந்திய நாணய பெறுமதியில் செலவில் இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டமையினால், பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, தாய்வான் போன்ற  நாடுகளில இருந்து இந்தியா செல்லும் யாத்திரிகர்களுக்கு அங்குள்ள புனித பௌத்த தலங்களைத் தரிசிக்க வசதி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: