குருதிப் புற்றுநோய் – சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழப்பு!

Wednesday, July 20th, 2022

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபர் ஒருவரின், நாடி வைத்தியத்தை நம்பி, சிகிச்சைக்கு ஏதுவாக யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவைச் சேர்ந்த 15 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்தார் .

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடல்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர் .

சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்றுநோய் இருந்ததாக கண்டறியப்பட்டது .

இந்த நிலையில் திடீர் இறப்பு விசாரணையில் சிறுவனுக்கு உரும்பிராயில் உள்ள நாடி வைத்தியம் செய்யப்பட்டதாக பெற்றோரினால் தெரிவிக்கப்பட்டது .

குருதிப் புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவம் உள்ள நிலையில் நாடி வைத்தியம் சிறந்தது என்று சிறுவனின் பெற்றோரினால் நம்பப்பட்ட நிலையில் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: