குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Saturday, November 5th, 2022

இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒருவரின் காயங்களில் இருந்து வெளியேறும் சுரப்புகளை நேரடியாக தொடுவதன் மூலம் மற்றுமொருவருக்கு தொற்று ஏற்படலாம் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாட்டில் இனங்காணப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த காய்ச்சலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், உங்களுக்கு புண்கள் மற்றும் சொறி ஏற்படும்.

மேலும்,உங்கள் ஆசனவாயைச் சுற்றி உங்கள் பிறப்புறுப்புகள் காயமடைந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

இது சம்பந்தமாக உறுதியான உறுதிப்படுத்தல் செய்து, நோய் முழுமையாக குணமாகும் வரை பாலுறவு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருங்கள். இது உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த நோயின் சிறப்பு என்னவென்றால், 80 வீதத்துக்கும் அதிகமான நோயாளிகள் தாங்களாகவே குணமடைகிறார்கள்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த நாடு என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை தொழில்நுட்பக் குழு அறிவிக்கும் வரை மக்கள் இந்த விடயத்தில் தேவையற்ற பீதியின்றி இருக்கவும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குரங்குக் காய்ச்சல் ஒரு கடுமையான கொடிய நோயல்ல என்றும் ஆனால் அது பாதிக்கப்பட்ட நபரின் திரவங்கள் மற்றும் சுவாசத் துளிகள் மூலம் மற்றவருக்கு இலகுவாகப் பரவக்கூடியது என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி பிரிவின் தலைவி, விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி அபேநாயக்க தெரிவித்தார்.

இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகமூடி அணிவது மற்றும் கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

இம்மாதம் முதலாம் திகதி டுபாயிலிருந்து வந்த 20 வயதுடைய நபரொருவர் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: