குமரபுரம் படுகொலை சம்பவம் : 6 இராணுவ வீரர்களும் விடுதலை!

Thursday, July 28th, 2016

குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேரை சுட்டு படுகொலை  செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு நேற்று அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் ஏழுபேர் கொண்ட ஜூரிகள்,  ஆதாரபூர்வமான சாட்சியங்கள் இன்மையினால் இவர்களை விடுதலை செய்ய, ஏகமனதாகச் சிபாரிசு செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கடந்த வெள்ளிக்கிழமை தனது தொகுப்புரையில் கோரிக்கை விடுத்திருந்தார். 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான  வழக்கு, 101 அதிகுற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆறு இராணுவ கோப்ரல்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அநுராதபுரம் விஷேட மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது. முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் அறுவரே, இந்தக் கொலைகளை மேற்கொண்டமைக்கான நியாயமான சாட்சியங்கள் சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

முறைப்பாட்டாளர் சார்பில் வாய்மொழி மூலம் விடயங்களை எடுத்துக்கூறும் போது சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி சுதர்ஸன டீ சில்வா இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களில் சிலமாறுபாடுகள் ஏற்படலாம் என, அவர் மன்றில்  சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், சாட்சியங்களில் காணப்படும் முரண்பாடுகள், குற்றச்சாட்டுகளில் இருந்து பிரதிவாதிகள் விடுபடும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை – தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த சந்தேக நபர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் மூதூர், கிளிவெட்டி  குமாரபுரத்தில் இந்தக் படுகொலைகளை மேற்கொண்டதாக, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பிலான  விசாரணைகள் கடந்த 27.06.2016 முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நாட்கள் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்கண்ட சாட்சிகள் மற்றும் கிராம மக்கள் சாட்சியங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Related posts: