கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்!

Monday, June 6th, 2016

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததால் அவரது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ராசா றமணி என்பவர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று காலையில் மரணமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வைத்தியர் ஜெயவர்த்தன மற்றும் கிளிநொச்சி மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி க. திருலோகமூர்த்தி ஆகியோரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின் உடல் யாழ் போதான வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஓரளவு சாதரண நிலைமைக்கு திரும்பிய நிலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த நோயாளி இரவு மீண்டும் சுகயீனம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்றும் ஆனால் வைத்தியசாலை அதிகாரிகள் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இதனாலேயே அவர் இறந்துள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மா.ஜெயராசா தெரிவிக்கையில் – வைத்தியசாலையின் பெண் பரிசோதகர் அவசர சிகிச்சை பிரிவில் மூளைக் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட வேளை மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு, உடல் யாழ் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலையின் கவனயீனமும் காரணமா என விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: