கிளிநொச்சியில் தொடர் மழை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை வழங்குவதில் தொடர்ந்தும் சிரமம் – சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021

எதிர்பார்க்கப்படாத கால நிலை காரணமாக பெய்து வரும் அதிகரித்த மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கியநீர் வருவதனால் குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு பொறியியலாளர் எந்திரி எஸ். சாரங்கன் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சிக்கான குடிநீரானது கிளிநொச்சி குளத்திலிருந்தே பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு  அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகம் கலங்கிய நீர் வருவதனால்  பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்  சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது கிளிநொச்சிக்கான குடிநீர்  விநியோகத்தை சீராக வழங்க முடியாதுள்ளது.  நாளாந்த நீர்த் தேவையின் மூன்றில் ஒரு பகுதியை மாத்திரமே தற்போது வழங்க கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை.  இதன் காரணமாக பொது மக்கள்  நீரை சேமித்தும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதோடு, குடிநீருக்கு கொதித்தாறிய நீரை பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் எந்திரி சாரங்கன் அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மழை பெய்து கிளிநொச்சி  குளத்திற்கான நீர் கலங்கிய நிலையில் வருமாயின் எதிர்காலத்திலும் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோக நிலைமையே ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு 021 2283981 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: