காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Saturday, September 2nd, 2023

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாட்டில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரத்தைப் பகிர சொல்கின்றன.

எனினும் மாகாண சபைக்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரிவினைவாதிகள் தமது அரசியல் நோக்கத்திற்காக நாட்டை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ள ஒன்றாகும். அரசாங்கம் என்ற வகையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ஒதுக்கி விட்டு ஏனைய நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருந்தது.

எனினும் வடக்கிலுள்ள சில அரசியல் கட்சித் தலைவர்கள் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோருகின்றனர். அந்த இரண்டும் இல்லாமல் மற்ற நிர்வாக அதிகாரங்கள் தேவையற்றது என்கிறார்கள்.

இதனால், எந்த வழியில் சென்றாலும், அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: