காணி உரிம மோசடி – சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேருக்கும் 21ஆம் திகதிவரை விளக்கமறியில்!

Saturday, November 12th, 2022

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும் வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் கட்டளையிட்டார்.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, மூத்த சட்டத்தரணிகள் உள்பட 20இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி முன்வைத்த பிணை விண்ணப்பம் மீது வரும் நவம்பர் 21ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என மன்று தவணையிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.

பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய உறுதியை நிறைவேற்றிய நொத்தாரிசான சட்டத்தரணி ஒருவரும் மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அத்துடன் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 9 சந்தேக நபர்களும் முற்படுத்தப்பட்டனர்.

முதலாம் இரண்டாம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி பி.அபிதனின் அனுசரணையில் மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா முன்னிலையானார். 3 ஆம் 5ஆம் 6ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ரமணனும் ம7ஆம் 8ஆம் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ரஜிந்தனின் அனுசரணையில் மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும் 9 ஆவது சந்தேக நபரான நொத்தாரிசான சட்டதரணி சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எஸ்.பரமராஜா, மூத்த சட்டத்தரணி எம்.றெமிடியஸ் உள்ளிட்ட 15 ற்கும் மேற்பட்ட சட்டதரணிகளும் முன்னிலையாகினர்.

விசாரணைகள் தொடர்பில் மன்றில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர், புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க விண்ணப்பம் செய்தனர்.

சந்தேக நபர்கள் 9 பேர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

“இந்த வழக்கில் உள்ள 9 சந்தேக நபர்களும் பிணை வழங்கப்படும் போது புலன் விசாரணைகளுக்கு தடையோ இடையூறோ ஏற்படுத்தமாட்டார்கள்.

இந்த வழக்கின் புலன் விசாரணைகளை முன்னெடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படவேண்டும். அந்த படிமுறைகளை முன்னெடுக்க நீண்ட காலமாகும். அதனால் சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டும்” என்ற சாரப்பட நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்து வரும் 21ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட மன்று அன்றுவரை சந்தேக நபர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: