இரசாயன உரத்திற்கு அரச மானியம் வழங்கப்படமாட்டாது – பசுமை விவசாய கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச் செல்லவும் எந்த தடையுமில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, November 23rd, 2021

பசுமை விவசாயம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கை எனவும் மரக்கறி, சோளம் மற்றும் தானிய வகைகள் உள்ளிட்ட செய்கைகளுக்கு தேவையான விவசாய இரசாயன உரத்தை தனியார் ஊடாக கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எமது நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காதென்றும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்போகச் செய்கை மற்றும் சேதனைப் பசளை விநியோகம் தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்..

மேலும் இரசாயன உரம் அல்லது விவசாய இரசாயனம் என்பன ஒருபோதும் அரசாங்க மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை விநியோகம் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் – சேதன விவசாயத்துக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த  விடயத்தில் விவசாயிகளுக்கான போதிய தெளிவூட்டல்களை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று, மேற்படி விடயங்களைச் செயற்படுத்தும் போது இடம்பெறக்கூடிய இரசாயனப் பசளை மாஃபியா தொடர்பிலும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்காகப் போராடி, சரியானதை வெற்றிகொள்வதற்கு, அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அத்தியாவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும், நெல் உட்பட ஏனைய பயிர்ச் செய்கைகள் தொடர்பான விவரங்களை, மாவட்ட ரீதியில் அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி நாட்டில் நிலவிய அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மரக்கறி உள்ளிட்ட பெரும்பாலான பயிர்களின் அறுவடைகள் குறைந்துள்ளமை தொடர்பிலும்  அவதானம் செலுத்தியுள்ளார்.

இதன்போது சேதனப் பசளை விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பெரும்போகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் இருப்பினும், மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து, பயிர்ச் செய்கை நிலங்களில் 70 வீதமானவற்றில் பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கும் பயிர்ச் செய்கைகளை அவர்கள் தாமதப்படுத்துவதற்கும் காரணம் – அவர்களுக்கான போதிய தெளிவூட்டல்கள் வழங்கப்படாமையாகும் என இதன்போது ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அவ்வாறு விவசாயிகளைத் தெளிவுபடுத்தாமை தொடர்பாக, உரிய அதிகாரிகளிடம் எனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.,

போராட்டங்களை முன்னெடுக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, பசுமை விவசாயக் கொள்கையில் இருந்துகொண்டே தீர்வுகளைக் காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதனையும் நினைவூட்டியுள்ளார்.

இதேநேரம் மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழு ஒன்றால் மாத்திரமே, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: