காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையம் தொடர்பில் கூறப்படும் வாதத்தை நம்பத் தயாரில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால் தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை தாம் நம்பத் தயாரில்லை என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் கொரோனா பரவுவதற்கு சுவிஸ் மத போதகர் தான் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் யாராவது ஒருவருக்குக் கொரோனா ஏற்பட்டாலும் அங்குள்ள ஏனையோருக்கும் பரவும் நிலை காணப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்றன. இராணுவத்தினர் இதனை நடத்துவதனால், இராணுவத்தினர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் இருப்பதனாலும், இப்படியான குற்றச்சாட்டுக்கள் வரும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் பொறுப்பு இராணுவ அதிகாரிகளை ஆராயப் பணித்துள்ளேன். அத்துடன் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: