காங்கேசன்துறை கடற்பரப்பில் காணமல்போன கடற்றொழிலாளர்களது குடும்பத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆறுதல்!
Saturday, June 16th, 2018காங்கேசன்துறைக் கடற்பகுதியில் தொழிலுக்குச் சென்று இதுவரை கரைதிரும்பாத கடற்றொழிலாளர்களது குடும்பத்தினரது இல்லத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.
கடந்த திங்களன்று (11) குறித்த கடலில் கடற்றொழிலுக்காக சென்ற தையிட்டி ஆவளை பகுதியை சேர்ந்த டேவிட் றேகன் (வயது 23) மற்றும் நல்லிணக்கபுரம் மாவட்டபுரம் பகுதியை சேர்ந்த இரத்தினசிங்கம் (வயது 65) ஆகிய இருவரும் இதுவரை கரைதிரும்பவில்லை.
இந்நிலையில் குறித்த இளைஞர்களது இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபை உறுப்பினருமான ஜெயபாலசிங்கம் (அன்பு) உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலை தெரிவித்துக்கொண்டதுடன் சம்பவ தினத்தன்று நடந்த விடயங்கள் தொடர்பிலும் குடும்பத்தினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
மேலும் காணாமல் போன இருவரையும் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக துறைசார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்
இதனிடையே முன்னரும் வடமராட்சி கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை கண்டுபிடித்து மீளவும் அக்குடும்பத்தினருடன் சேர்த்துவைத்த நடவடிக்கைகளில் டக்ளஸ் தேவானந்தா அதிக அக்கறையுடன் செயற்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
|
|