காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடுப்பு!

Friday, June 17th, 2022

குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி தொடருந்து ஒன்று இன்றுமுதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

10 பெட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருந்தில், 520 ஆசனங்கள் உள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த தொடருந்து, அடுத்தநாள் அதிகாலை 5.25 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து, 5.30 க்கு புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடையும்.

பின்னர் அந்தத் தொடருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு கல்கிஸையை சென்றடையும்.

குறித்த தொடருக்கான பயணக் கட்டணம் 2,800 ரூபாவாகும் என யாழ்ப்பாண தொடருந்து நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆசன முன்பதிவுகளை, யாழ்ப்பாண தொடருந்து நிலையத்திலும், ஏனைய ஆசன முன்பதிவுகள் செய்யக்கூடிய தொடருந்து நிலையங்களிலும் மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: