கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் – கல்வியமைச்சு தெரிவிப்பு!
Monday, March 24th, 2025
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போலிச் செய்தியில் கீழே குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடத்தின் பரீட்சை வினாத்தாள் பாடத்திட்டத்திற்கு அப்பால் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது, மேலும் வினா முறையும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக, விஞ்ஞானப் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும்,
மேலும் ஒவ்வொரு தேர்ச்சிக்கும் மதிப்பெண் அளவுகள் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. 65 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு சிறந்த தேர்ச்சி ( ஏ ) வழங்கப்படும்”
மேலே தெரிவிக்கப்பட்ட விடயம் சமூக ஊடகங்களில் மட்டுமே பரப்பப்பட்டுள்ளது என்பதையும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகமோ அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களமோ அத்தகைய எந்த முடிவையும் எடுக்கவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற போலிச் செய்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
000
Related posts:
|
|
|


