கப்பலிலிருந்து விழுந்த கொள்கலன்களுக்கு அருகில் செல்லவேண்டாம்!

Tuesday, May 25th, 2021

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, கடலில் விழுந்த 3 கொள்கலன்களில் எபோக்ஸி ரெஸின் (Epoxy Resin) என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த இரசாயனம் அடங்கிய கொள்கலன்களுக்கு அருகில் செல்லவேண்டாம் எனவும், குறித்த கொள்கலன்களை கண்டால் காவல்துறையினருக்கோ, கடற்றொழில் காரியாலயத்துக்கோ அறிவிக்குமாறு, கொழும்பு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களிடம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

இந்த கொள்கலன்களில் அடங்கியுள்ள இரசாயனங்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்படுத்தக்கூடியவை என அவர் மேலும் தெரிவித்தார்.

இரசாயன திரவியங்களை தாங்கியவாறு பயணித்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த 20 ஆம்திகதி கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு 9.5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிடப்படிருந்தபோது தீப்பற்றியது.

அதன்பின்னர், துறைமுக அதிகாரசபை, கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

எனினும், பலந்த காற்றின் காரணமாக, இன்று காலை மீண்டும் அக்கப்பல் மீண்டும் தீப்பற்றியதுடன் அதிலிருந்த இரசாயனம் காரணமாக வெடிப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன. அத்துடன், தீயினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் காரணமாக இருவர் காயமடைந்ததுடன், கப்பலில் இருந்த 25 பணிக்குழாமினரை இலங்கை கடற்படையினர் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, சமுத்திர சூழலை பாதுகாப்பதற்காக தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலை 50 கடல் மைல் தொலைவிற்கு ஆழ்கடலுக்கு நகர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: