கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு!

Wednesday, May 22nd, 2024

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக எப்போதும் வாதிடுவோம் என தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே 2023ஆம் ஆண்டு 4 இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கனடா இலங்கையில் மனித உரிமைகளின் வலுவான பாதுகாவலராக உள்ளது.  நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசிய மதிப்புகளான மதச் சுதந்திரம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து நேற்றையதினம் (21) அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, கனேடியப் பிரதமரின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: