கடல் உயிரின பண்ணைகளின் பாதுகாப்பை முன்நிறுத்தி காவலரண்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா வலியுறுத்து!

Friday, March 19th, 2021

தீவக பகுதிகளில் குறிப்பாக மண்டைதீவு உள்ளிட்ட பகுதிகளில் கடல் உயிரின வேளாண்மையை மேற்கொள்ளும் பண்ணையாளர்களது கடற் பண்ணைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே இவ்வாறு  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது பகுதியில் பல இடங்களில் தற்போது கடலட்டடை இரால் உள்ளிட்ட பல்வேறு கடலுயிரினங்கள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பண்ணைகளை பண்ணையாளர்கள் பெரும் முதலீடுகளில் செய்கின்றபோதும் அதனை பாதுகாப்பதற்கான அரண்களை அமைப்பதற்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய செயற்பாடுகளால் குறித்த பண்ணையாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன் அவர்களது பண்ணைகளும் சூறையாடப்படும் நிலையும் காணப்படுகின்றது. எனவே இதற்கான வழிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

இதுகுறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலரிடம் கேட்டபோது – அதற்கான காணிகள் வழங்கலில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அதனை தான் ஓரிரு நாள்களில் சீர்செய்து காவலரண்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: