கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் வற் வரியை குறைக்க முடியும் – ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023

கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வற் வரியை குறைக்க முடியும்  என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 15 சதவீதமாகக் காணப்பட்ட வற் வரி 3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. வற் வரி தொடர்பில் போலியான தகவல்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பரப்பப்படுகின்றன.

இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் என்பவை எமக்கு கடன் சலுகைகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வற் வரியை குறைக்க முடியும்.

அதற்கமைய முடிந்தளவு மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: