கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் – கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கு பாரிஸ் கிளப்பும் தயார் என அறிவிப்பு!

Saturday, April 15th, 2023

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது கடன் பேச்சுவார்த்தையை விரைவில் முடிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆலோசித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது உலக வங்கி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை பரிஸ் கிளப் அமைத்துள்ளது.

இதனை தொடர்ந்து எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றி குறித்த குழு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.

நியாயமான உண்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்புப் பேச்சுக்களின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதிசெய்ய அனைத்து தொடர்புடைய தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற பாரிஸ் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பொதுத்துறை கடன் வழங்குநர்களும் இந்த செயல்பாட்டில் பங்கேற்கவும் பரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: