கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும், நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் – 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.

நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும். எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்.

கொரோனா பரவல் காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை என்பன இதன் மூலம் பாதுகாக்கப்படும். அதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் செயற்படுத்த முடியும்.

தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மூலமே அவ்வாறான எழுச்சியை நோக்கிப் பயணிக்க முடியும். உலகளாவிய தொற்றுப் பரவலானது, பொதுமக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான முன்னேற்றத்தை மோசமாகப் பாதிக்கச் செய்துள்ளது.

இவ்வாறான நிலைமையிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு என்பன நிலைநாட்டப்பட்டுள்ளன.

இதேவேளை பல புதிய சீர்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதக நிலைமைகளைச் சீர்செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உலகளாவிய ரீதியில் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன.

மக்களைப் பாதிப்படையச் செய்யும் அடிப்படையற்ற அரசியல் போராட்டங்கள், நாட்டை நேசிக்கின்ற பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளமையானது, அரசாங்கத்தின் மீது அந்த மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

கடந்த காலம்முதல் தொடர்ந்து பேணப்பட்டு வருகின்ற இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டே புதிய வெளிநாட்டுத் தொடர்புகளையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ளமையானது, எமக்குக் கிடைத்த தனித்துவமான முதலீடாகும்.

அந்தவகையில் மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன் கூடிய புத்தாண்டாக மாற்ற அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: