கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!

Friday, March 3rd, 2023

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் முற்பகல் 10 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணிமுதல் முற்பகல் 11மணி வரை இடம்பெற்றது.

படகு சேவையில், குறிக்கட்டுவானில் இருந்து பயணிக்கும், நபர் ஒருவருக்கு, இரு வழிப் பயணக் கட்டணமாக 2000 ரூபா அறிவிடப்பட்டது.

அத்துடன் மாலை 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

இதேவேளை, நாளைய தினம் கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கான காலை உணவை, இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது பக்தர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்காக இந்தியாவிலிருந்து இரண்டாயிரத்து 408 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 60 விசைப்படகுகளும் 12 நாட்டுப் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts: