ஓலைக் குடிசைகளில் இருக்கும் எமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் அரியாலை மேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Monday, June 4th, 2018

நீண்டகாலமாக தாம் நிரந்தர வீடுகள் இன்றி ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருவதாகவும் தமக்கு நிரந்தரமான வீடுகளை அமைப்பதற்கு வழிவகை செய்துதருமாறு அரியாலை மேற்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியாலை மேற்கு பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபோதே அப்பகுதி மக்களால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலசலகூடவசதி மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் தாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவருவதால் தமக்கான குறித்த தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து தரும்படியும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களது பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினர் திருஞானராசா உடனிருந்தார்.

Related posts: