ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுங்கள் – சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை!

Wednesday, June 9th, 2021

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் வேண்டுகோளுக்கமைய நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதன்போது தாதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் கருத்து தெரிவித்திருந்தார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பயிற்சி பெறாத தாதியர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறித்து வணக்கத்திற்குரிய தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தற்போது ஓராண்டிற்கு பயிற்சிக்காக 2000 எனும் குறைந்த எண்ணிக்கையிலான தாதியர்கள் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படுவதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது அப்பிரிவுகளில் சேவையாற்றும் பயிற்சி பெறாத தாதியர்களை குறித்த பிரிவுகளில் சேவையாற்றும் காலத்தை பயிற்சி காலத்துடன் சேர்க்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க இதுவரை 840 தாதியர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேவையாற்றுவதற்கான குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 1000 பேருக்கு துரித பயிற்சி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு இதன்போது ஆலோசனை வழங்கிய பிரதமர், தாதியர்களின் சேவை காலத்தை நீடிப்பது குறித்த செயற்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும் வினவியிருந்தார்.

தாதியர்களின் சேவை காலத்தை 63 ஆண்டுகள் வரை நீடிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார சேவையில் ஈடுபடும் அனைவரும் இதுவரை சிறப்பாக சேவையாற்றி வருவதாக தெரிவித்த பிரதமர், அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கேட்டறிந்து கொண்டார்..

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தாதியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுக்க முறையான செயற்பாடொன்றை வகுக்குமாறு இதன்போது பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதேநேரம் தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களின் முறைப்பாடுகளை பெற நடவடிக்கை!
தேர்தலை பிற்போடுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை - ஆளுநர் திருமதி பி.எஸ...