ஒவ்வொரு மாகாணங்களுக்குமான பொலிஸ் அதிகாரப் பகிர்வின் பின்விளைவுகள் பாரதூரமானது – அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, August 3rd, 2023

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்.

இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்காக, இந்த விவகாரத்தில் வடக்கு மக்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை முன்னெடுத்து சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.

பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாட்டிலுள்ள ஒரு பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டுமென்றால் எமது நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுப்படவேண்டும். அவ்வாறெனில் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் தேசிய, இன, மத பேதமின்றியும் பாகுபாடு இன்றியும் பொதுவாக நாட்டுக்கு ஏற்புடைய முறையொன்றை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பதே தற்போது தோற்றம்பெற்றுள்ள பிரச்சினையாகும்.

இதன்போது, சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, தெற்கு மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடி நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

பொலிஸ் அதிகாரம் தொடர்பில், தமிழ் மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தபோதும், பொலிஸார் தற்போது அரசியல் மயமாகியுள்ளதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான அமைச்சரொருவரையும் ஒரு நிர்வாகத்தின் கீழாக பொலிஸ் சேவை இருக்கும்போதே இந்த நிலைமை என்றால் ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது பொலிஸ் பிரிவுகள் உருவாகி 9 முதலமைச்சர்களின் கீழ் பொலிஸ் நிர்வகிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது தொடர்பில் சிந்தித்து பார்க்கவேண்டும்.

எனவே, இதனூடாக தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டு மக்களுக்கு என்னவாகப் போகிறது என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக விவாதித்து தீர்வொன்றுக்கு வரவேண்டும்.

எந்தவொரு நாடும் அவர்களுக்கு தேவையான சட்டங்களை அந்த நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு நாட்டிலும் பாராளுமன்றம் என்றவொரு கட்டமைப்பு இருக்கிறது. இதுதொடர்பில், சகலரும் ஓரிடத்தில் ஒன்றுக்ககூடிய கலந்துரையாடி பொதுவான தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.

இருந்தபோதும் 13 ஆவது அரசியலமைப்பை பொறுத்தவரையில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த எனைய சகல அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்த தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு!
வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவிப...
குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திர...