ஒலிம்பிக்கில் பங்கேற்று மனிதாபிமான ஒத்துழைப்பை காட்டியுள்ளது இலங்கை – இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் பாராட்டு!

Wednesday, August 11th, 2021

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் அகிரா சுஜியாமா, ஜப்பான், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கை காட்டிய மனிதாபிமான ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்..

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த உடனடி நடவடிக்கைகளால் ஜப்பான் அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஜப்பானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையேயான இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறுவதால், இரு நாடுகளினதும் இணைந்த குறித்த விழாவை நடத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஜப்பானிய முதலீட்டின் கீழ் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் இரு தரப்பினரும் இதன்போது பரிமாறிக் கொண்டனர்

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் நல்குகின்ற நன்றிகளை இதன்போது ஜப்பான் பிரதமருக்கு அமைச்சர் குணவர்தன தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: