ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகத்தில் ரூபா 23.89 நட்டம்! பெற்றோலிய வள அமைச்சர் கூறுகிறார்!

Friday, July 20th, 2018

மண்ணெண்ணெய் விநியோகத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு லீற்றருக்கு 23.89 ரூபா நட்டம் ஏற்படுவதாகப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேற்று இடம்பெற்ற போது மைத்திரி ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் ரணதுங்க மேலும் தெரிவித்ததாவது:

விலை அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலையை மீனவர்களின் கோரிக்கையால் ரூபா 70 ஆகக் குறைத்தோம். ஆனால் எமக்குத் தற்போதும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 93.89 ரூபா ஒதுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் நட்டத்திலேயே ஒரு லீற்றரை 70 ரூபாவுக்கு விநியோகிக்கின்றோம்.

எரிபொருள் சூத்திரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் அது பற்றி அறிவிக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் சூத்திரம் திறைசேரியால் தீர்மானிக்கப்படும்.

நாம் பன்னாட்டுச் சந்தையில் எரிபொருள் விலை உயரும்போது உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கவும் பன்னாட்டுச் சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை குறையும் வகையில் எரிபொருள் சூத்திரத்தை வடிவமைத்துள்ளோம்.

நாம் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அதற்கான குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழு வழங்கும் ஆலோசனைக்கமைவாகவே விலையின் ஏற்ற இறக்கம் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் என்றார்.

Related posts: