ஒடிசா தொடருந்து விபத்து – உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023

ஒடிசா தொடருந்து விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், தொடருந்து பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று தொடருந்து துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) சரக்கு தொடருந்து மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் கடுகதி தொடருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் பின்னர் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் தொடருந்து விபத்து நடந்த இடத்தில் தொடரூந்து துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ” இது ஒரு துயர்மிகு விபத்து. தொடருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சை தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா தொடருந்து விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடருந்து பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார்” என்று கூறினார்.

முன்பதாக கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னைசென்ட்ரல் கோரமண்டல் கடுகதி தொடருந்து நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் தொடருந்து நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதியுள்ளது.

இதில் கடுகதி தொடருந்தின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு தொடருந்து என இரண்டு தொடரூந்துகளும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தொடருந்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தொடருந்துகளும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு தொடருந்தும் மூன்றாவது தொடருந்தாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது.

.

இந்த தொடருந்து விபத்து காரணமாக கோவா – மும்பை இடையேயான வந்தே பாரத் தொடருந்து சேவை தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக கொங்கன் தொடருந்து துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: