ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசு ?
Tuesday, February 13th, 2018
ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்பட்ட பின்னடைவினால் அரசாங்கத்தில் ஸ்திரமற்ற நிலைய உருவாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய உறுப்பினருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தாம் செயற்பட வேண்டியிருப்பதால் பிரதமரே உரிய தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|
|


