ஏழை மக்களது வாழ்வியல் விடியலுக்காக உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன்!
Tuesday, February 14th, 2017
பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தொடர்பில் சதாகாலமும் சிந்தித்து அதற்கு செயல் வடிவம் கொடுப்பவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (14) நடைபெற்ற நாவாந்துறை, குருநகர், வசந்தபுரம் பகுதி மக்கள் உடனான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகரத்தின் கரையோர பகுதிகள் மட்டுமல்லாது மாவட்டத்தின் ஏனைய கரையோர பகுதிகளில் வாழும் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்கள் இன்றும் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடனும் பிரச்சினைகளுடனும் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து அமைச்சர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டிருந்த செயலாளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் சதாகாலமும் சிந்தித்து கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கு அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி நெறிப்படுத்தியிருந்தார். அதனடிப்படையிலேயே குருநகர் 5மாடி குடியிருப்புத்திட்டம் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் நாவாந்துறை மற்றும் வசந்தபுரம் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் பலவும் பூர்த்தி செய்யப்பட்டன.
இந்நிலையில் மக்கள் சரியான வழியைக் காட்டும் அரசியல் தலைவர்களை இனங்கண்டு அவர்களை வெற்றிபெறச் செய்யும் போது மக்களின் நாளாந்த பிரச்சினைகள் மட்டுமின்றி ஏனைய பிரச்சினைகளுக்கும் சரியான முறையில் தீர்வுகளைப் பெற்றிட முடியும். மக்களின் தேவைப்பாடுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கேற்ற வகையில் உரிய நடவடிக்கைகளையும் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக வசந்தபுரத்தில் வாழும் 81குடும்பங்களைச் சேர்ந்தோர் கடந்த காலங்களில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக தமது தற்காலிக குடியிருப்புக்களுக்கான மின் இணைப்பைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில் தற்காலிக வீட்டிலிருந்து நிரந்தர வீடுகளுக்கான மின் மாற்றகளை மாற்றும் போது ஒருதொகை பணத்தை செலுத்துமாறு மின்சார சபையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும் இந்நிலையில் தமது கஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு இம் மின்மானிகளை அறவீடுகள் இல்லாது மாற்றுவதற்கு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர்
இதேபோன்று நாவாந்துறை மண்பிட்டி கரையோரம் மற்றும் குருநகர் 5 மாடித் திட்டத்திற்கு அருகான இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியில் வாழும் மக்கள் தாம் வாழ்ந்து வரும் காணிகளை தமக்கு உரித்தாக்கி அதற்கான காணி உரிமங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் கோரியிருந்தனர்.
மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறை சார்ந்தவர்களுடன் கலந்தரையாடி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார். இதனிடையே குறித்த பகுதி மக்களின் ஏனைய அடிப்படைத் தேவைகளான மின்சாரம், குடிநீர், உள்ளக வீதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துப்பட்டது.
இதன்போது யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாகச் செயலாளர் துரைராஜா இளங்கோ (றீகன்), யாழ்.மாநாகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|